
இப்போது வெட்கித் தலைகுனிகிறேன் - இம்ரான் மகரூப்!
ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு சிறந்த நன்றிக்கடன் செய்துவிட்டார் என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்தபின் ஊடகங்களிடம் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம்கள் மீது குறிப்பாக அரசியல்வாதிகள் மீது தீவிரவாத முத்திரை குத்தும் நோக்கில் சில அரசியல்வாதிகளும், பெரும்பான்மை ஊடகங்களும் நன்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன.
இதனால் எமது சமூகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி எமது நாடு மற்றுமொரு இன கலவரத்தை நோக்கி செல்லும் சூழ்நிலை உருவாகிறது.
எனவே இவர்கள் எம்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள் என அவர்களுக்கு சவால் விட்டு இந்த விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி எமது சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள அரசியல் நோக்கம் கொண்ட வீண்பழியை போக்கவே முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்துள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண நிலைக்கு முற்றுமுழுதாக பொறுப்பு கூறவேண்டியவர் ஜனாதிபதியே.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின் முஸ்லிம்கள் தொடர்பாக பெரும்பான்மை மக்களிடம் நன்கு திட்டமிட்டு இனவாத பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெற்றன.
இந்த இனவாத பிரச்சாரங்களை தடுக்கவோ, தாக்குதல்களை கட்டுபடுத்தவோ சட்டம் ஒழுங்கு அமைச்சராகவோ, பாதுகாப்பு அமைச்சராகவோ, ஜனாதிபதியாகவோ அவர் உரிய நடவடிக்கைகள் எதையும் முன்னெடுக்கவில்லை.
அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் போது உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுக்க யார் அனுமதி கொடுத்தது?
இன்று கண்டியில் பாரிய மக்கள் கூட்டம் எவ்வாறு ஒன்றுகூட முடியும்? கப்பலின் சுக்கானை கொண்ட ஆடை அணிந்த முஸ்லிம் பெண்ணின் மீது பாயும் சட்டம் ஏன் இவர்கள் மீது பாயவில்லை?
இதற்கெல்லாம் ஒரே விடை விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார்.
அவரை ஜனாதிபதியாக்க பாடுபட்ட முஸ்லிம்கள் இன்று தாக்கப்படும் போது அதை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியாத ஜனாதிபதிக்கா நான் உயிர் அச்சறுத்தல்களுக்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தலின் போது பிரச்சாரம் செய்தேன் என்பதை நினைத்து இப்போது வெட்கித் தலைகுனிகிறேன்.
அவரை ஜனாதிபதியாக்கிய முஸ்லிம்களுக்கு இன்று அவர் சிறந்த நன்றிக்கடன் செய்துவிட்டார் எனவும் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.