ஜனாதிபதி நிதியத்தில் புலமைப்பரிசில் பெற்று பட்டப்படிப்பு மற்றும் இதர கல்வி நடவடிக்கைகளுக்காக 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 வரை அரசியல் வாதிகளின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் பெருமளவானோர் வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருன பனாகொட தெரிவித்தார்.
இன்றைய (05) நாடாளுமன்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கல்வி, உயர்கல்வி அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார கேட்ட கேள்விக்கு பிரதமர் ஹரிணி சார்பில் பதிலளித்த அருன பனாகொட இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ”அவ்வாறு சென்றவர்களின் நீண்ட பட்டியல் காணப்படுவதாகவும் அதை நான் சபைக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்த அவர், அதில் சிலரின் பெயர்களையும் வெளியிட்டார்.
வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு சென்றவர்களின் விபரத்தில் நிபந்தனைகள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர ராஜகருணாவின் மகன், 2006ஆம் ஆண்டு ஐ.எம்.கொடிதுவக்கு கருணாசேன கொடித்துவக்குவின் மனைவி அல்லது மகள் என நினைக்கிறேன்.
2006 இல் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனின் மனைவி திருமதி ராதாகிருஷ்ணன், 2006 ஆம் ஆண்டு அரசியல் வாதியின் உறவினர் தினேஸ் என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியத்தில் குறித்த புலமைப்பரிசிலுக்காக 2005 முதல் 2014 வரை ஒவ்வொரு வருடமும் பல மில்லியன்கள் வழங்கப்பட்டுள்ளன.
வறுமையில் வாடும் உயர்கல்வி கற்க முடியாதவர்களுக்கு வழங்கப்படும் குறித்த நிதியம் 2005 தொடக்கம் 2014 வரை மோசடியாகவே வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளிநாடு சென்றவர்கள் படிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பினரா என்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை“ என தெரிவித்தார்.








