வவுனியா கூமாங்குளம் – அலகரை வீதி புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்தார்.
அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தங்களை சில எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளாமல் செயல்படுவதாக தெரிவித்த அவர், “இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது” என கூறினார். குறிப்பாக தமிழரசுக் கட்சியில் ஒருவரே அப்படிப்பட்டவராக இருக்கின்றார் என்றும், மற்றவர்கள் கொஞ்சம் பரவாயில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான தவறான அரசியல் செயற்பாடுகளால் இந்த வருடம் தரம் 06 வகுப்புகளை ஆரம்பிக்க முடியாமல் போனதாகவும், இருந்த போதும் அரசு அந்த சீர்திருத்தங்களை நிறுத்தாமல் தொடர்வதாகவும் அமைச்சர் கூறினார். மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்வி மாற்றங்கள் அவசியம் என்றும், அதற்கு எதிராக அரசியல் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் அரசாங்கம் தேர்தலுக்காக அல்ல, மக்களின் தேவைக்காகவே அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், வீதி புனரமைப்புகள் உள்ளிட்ட திட்டங்கள் முறையாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.








