அரச அதிகாரிகள் தமது கடமையுடன் மட்டும் நின்றுவிடாமல், களத்தில் இறங்கிச் செயற்பட்டால் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சுகாதார அமைச்சு ஒரு சிறந்த முன்னுதாரணத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக, பிரதான வீதியிலுள்ள பொதுமக்களுக்கான பஸ் தரிப்பிடம் அசுத்தமான நிலையில் காணப்பட்டது. இதனால் பயணிகள் அந்த இடத்தைப் பயன்படுத்த முடியாமல் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.
குறித்த விடயத்தினை அவதானித்த பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் உவைஸ் பாறூக், தனது ஊழியர் குழுவினரை ஒருங்கிணைத்து விசேட சிரமதானப் பணியொன்றை முன்னெடுத்தார். வைத்தியர் மற்றும் ஊழியர்கள் நேரடியாகக் களமிறங்கி, அங்கிருந்த குப்பைகளை அகற்றி, சீர்செய்து அந்தப் பஸ் தரிப்பிடத்தை மக்கள் பாவனைக்கு உகந்த தூய்மையான இடமாக மாற்றியமைத்தனர்.
தமது வழமையான சுகாதாரப் பணிகளுக்கு அப்பால், பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதிலும் மக்கள் நலனிலும் டொக்டர் உவைஸ் பாறூக் காட்டி வரும் அதீத அக்கறை இப்பிரதேச மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைத்தியரின் இந்த செயல் குறித்து அப்பகுதி மக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.









