அரசாங்கம் மற்றொரு நாட்டுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணை, ஹேக்கர் ஒருவரின் தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்பட்ட விவகாரத்தை, மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர் ஒருவரின் வேலை என அரசாங்கம் கூறக்கூடும் என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கவனக்குறைவினால் ஏற்பட்ட இந்த பாரிய தவறை மறைப்பதற்காகவே இறுதியில் இவ்வாறு கூறக்கூடும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அரசாங்கத்தால் வெளிநாடு ஒன்றுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணை ஹேக்கர் ஒருவரின் தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்பட்டதை வெறும் தகவல் தொடர்பு அல்லது மின்னஞ்சல் செய்திப் பிரச்சினை என ஒதுக்கிவிட முடியாது என்று பெரேரா வலியுறுத்தினார்.
திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட சுமார் 12 உயர் மற்றும் கீழ்மட்ட அதிகாரிகளின் அனுமதி மற்றும் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் இவ்வாறானதொரு கொடுப்பனவு, ஹேக்கரின் கணக்கிற்குச் சென்றதன் பின்னால் அரசாங்கத்தின் கடுமையான அலட்சியம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து தவறுகளை இழைத்து வருவதாகவும், ஆனால் அவற்றில் ஊழல் இல்லை என்று கூறி மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.








