மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவப் பெருவிழா நேற்று (22) பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
இவ்வாண்டிற்கான உற்சவம் நேற்று தொடங்கியது எதிர்வரும் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நேற்று மாலை 6.30 மணியளவில் சுப முகூர்த்த வேளையில் அம்பாளின் திருக்கதவு திறத்தல் நிகழ்வுடன் உற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க நாவலடிப் பதியில் அமைந்துள்ள இவ்வாலயம், பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையையும் வழிபாட்டையும் பெற்ற தலமாக விளங்குகிறது. கடலோரப் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன், தம்மை நாடி வரும் பக்தர்களின் துயரங்களை நீக்கி அருள்பாலிப்பவளாக பக்தர்களால் போற்றப்படுகிறார்.

உற்சவ காலத்தில் தினமும் விசேட பூஜைகள், வழிபாடுகள் மற்றும் சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் 29ஆம் திகதி பூரணைத் திதி மற்றும் மூல நட்சத்திரம் கூடிய சுப வேளையில் அம்பாளின் பாலாமிர்த மற்றும் பஞ்சாமிர்த திருக்குளிர்த்தி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், நாவலடிக் கடலில் கும்பம் சொரிதல் நிகழ்வுடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.
உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் ஆசார சீலத்துடன் வருகை தந்து, அம்பாளின் அருளைப் பெற்று ஆன்மீக பலன் அடையுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.









