கிளிநொச்சி பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிவேகமாகப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்து பொலிஸார் விசேட அதிரடி வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
வீதி விபத்துக்களைத் தடுப்பதுடன், பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகன சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கடந்த இரு நாட்களாக இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டிருந்த 12 அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சோதனைகளில் இலக்கத் தகடுகள் இன்றி இயக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி இயக்கப்பட்ட வாகனங்களும் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக எதிர்காலத்திலும் இதுபோன்ற கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.








