மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கர்ப்பிணிப் பெண், கடந்த 17ஆம் திகதி கடுமையான காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட அவர் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே குழந்தையைப் பெற்றெடுத்தார். எனினும், டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்ததால், தொடர்ந்த சிகிச்சை பலனின்றி கடந்த 25ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் பதிவான முதல் டெங்கு மரணமாகும்.
இதனையடுத்து, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், கொசுக்கள் பெருகும் இடங்களை உடனடியாக அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.








