அம்பாறை வைத்தியசாலையில் உடலியல் சிகிச்சை நிபுணராக பணியாற்றிய 34 வயதான ஷிமயா தர்ஷனி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தொடர்ச்சியாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த வழக்கின் பிரதான சந்தேகநபருக்கு தலைமறைவாக இருக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட குண்டசாலை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள், நேற்று (26) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர் ஷிமயா தர்ஷனி என்பது உறுதி செய்யப்பட்டது.
அவரது காதலன் எனக் கூறப்படும் நபர், மனைவி மற்றும் குழந்தையுடன் யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதாக பிரதேச சபை ஊழியர் ஒருவரும் பின்னர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், பிரதான சந்தேகநபர் மறைந்திருக்க குண்டசாலை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி உதவியதாக தெரியவந்துள்ளது.
கொலை நடந்த மறுநாள், பிரதேச சபை ஊழியரின் அறிமுகத்தில் அந்த பொலிஸ் அதிகாரியை சந்தித்த பிரதான சந்தேகநபரிடம், “சடலத்தை ஏதாவது ஒரு வைத்தியசாலைக்கு அருகில் போட்டுவிடுங்கள்” என ஆலோசனை வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி, சடலம் தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, “சட்டத்தரணி ஒருவரை ஏற்பாடு செய்கிறேன், பயப்படாமல் தலைமறைவாக இருங்கள்” எனவும், பின்னர் “பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்கொலை என்று வரும் வரை வெளியே வர வேண்டாம்” எனவும் அந்த அதிகாரி கூறியதாக விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சம்பவம் தொடர்பில் தகவல்களை அறிந்த பின்னர் பிரதான சந்தேகநபரிடம் இருந்து 10,000 ரூபாய் பெற்றுக்கொண்டு, அதில் ஒரு பகுதியை மதுபானம் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் வாங்க பயன்படுத்தியதாகவும் விசாரணைகளில் வெளியாகியுள்ளது.
விசாரணையின் போது, உயிரிழந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பிரதான சந்தேகநபர் வாக்குமூலம் அளித்திருந்தாலும், பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் குறிப்பிட்ட ஜன்னல் திரைச்சீலை கம்பி மனித உடலின் எடையைத் தாங்கும் வலிமை கொண்டதல்ல என்பதால், விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கில் பொய்யான தகவல் வழங்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், குற்றத்தை மறைக்க உதவியதாக பிரதான சந்தேகநபரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








