துரித உணவு உற்பத்தி திட்டத்தை ஊக்குவிக்க பயிர் செய்கை செய்யப்பட்ட மரக்கறி வகைகள் அறுவடை விழா
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அதிக மழை வீழ்ச்சி காரணமாக விவசாய செய்கையில் ஏற்பட்ட பாதிப்பினை அடுத்து மரக்கறி வகைகளின் விலைகள் உயர்ந்த நிலையில் காணப்பட்டன.
இந்த நிலைமையை மாற்றி அமைக்கும் பொருட்டு விவசாயிகள் மத்தியில் விவசாய செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு மட்டக்களப்பு சத்துரு கொண்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலைய வளவில் துரித உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் நிலக்கடலை மற்றும் மரக்கறி வகைகள் செய்கை செய்யப்பட்டன.

இங்கு செய்கை பண்ணப்பட்ட நிலக்கடலை மற்றும் மரக்கறி வகைகளின் அறுவடை விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஐ. கே. ஜி முத்து பண்டா பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டு இந்த அறுவடை விழாவினை ஆரம்பித்து வைத்தார் .
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எம் .எஸ் .ஏ கலீஷ் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாயப் போதனாசிரியர்கள் அடங்கலாக விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள் பலரும் இங்கு பிரசன்னமாக இருந்தனர்.
இதன்போது விவசாய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவசமாக தெளிகருவிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.









