செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட இரண்டாவது அகழ்வுப் பணிகள் இன்று (21) முன்னெடுக்கப்படவுள்ளன.
சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ஆகியோரின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், அகழ்விற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், இன்று முதல் எதிர்வரும் 15 நாட்களுக்கு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின், முதலாவது அகழ்வுப் பணிகளின் போது 65 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதில் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெண்களின் என்புக்கூட்டுத் தொகுதிகளும் மீட்கப்பட்டன. அத்துடன் பொம்மை, புத்தகப்பை, உட்பட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்த அகழ்வுப் பணி தொடர்பில் இறுதியாக நடைபெற்ற நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, செம்மணி- சித்துப்பாத்தியில் குற்றச்செயல் இடம் பெற்றுள்ளதாக தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
இந்த பின்புலத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் அகழ்வு நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
இன்றைய அகழ்வில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படுமா, அதில் சிறுவர்கள்,பெண்கள் அடங்குவார்களா? என்ற பல கோணங்களில் மக்கள் மத்தியில் கேள்விகளும் பதற்றங்களும் எழுந்துள்ளன.








