வவுனியா மாநகர சபையின் மேயர் சு. காண்டீபனும், சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா. கிசோரும் பதவி நீக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வவுனியா மாநகர சபை மேயர் சு. காண்டீபன், மேயர் பதவியிலிருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் 2026 ஜூன் 24 முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கே. கந்தையா அரியநாயகம் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின்னர், உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் 277ஆம் பிரிவின் கீழ் காண்டீபன் மேயராக தொடரத் தகுதியற்றவர் எனத் தீர்மானித்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

சு. காண்டீபன், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு, தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் 11 உறுப்பினர்களின் ஆதரவுடன் மேயராக தெரிவானவர்.
இதேவேளை, மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதன் தீர்ப்பு ஜூலை மாத ஆரம்பத்தில் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.









