மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் தமிழினப் படுகொலை நடைபெற்ற இடம் தோண்டப்பட வேண்டும் என்ற பிரேரணை மட்டக்களப்பு மாநகர சபையில் முன்வைக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, படுகொலை செய்யப்பட்டோரின் 35ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி சபை உறுப்பினர்கள் எழுந்து நின்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
மட்டு மாநகர சபையின் 3வது மாதாந்திர அமர்வு நேற்று (21) முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழரசுக் கட்சி உறுப்பினர் தயாளன் கௌரி, 1990ம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி நடைபெற்ற சத்துருக்கொண்டான் படுகொலைக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அப்போதைய இராணுவ முகாம் அமைந்த இடம் புதைகுழி தோண்டப்பட வேண்டும் எனும் பிரேரணையை முன்வைத்தார்.

அவர் உரையாற்றுகையில், 1990ம் ஆண்டு சத்துருக்கொண்டான், பனிச்சையடி, திராய்மடு, பிள்ளையாரடி, கொக்குவில் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்திருந்த நிலையில், இராணுவத்தினரால் 186 பேர் ஒன்று கூடச் செய்யப்பட்டு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு துப்பாக்கிச் சூடு மற்றும் வெட்டுகொலையால் படுகொலை செய்யப்பட்டதாக நினைவுகூர்ந்தார்.
அத்துடன், ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணன் தலைமையிலான விசாரணைக் குழுவும் இது திட்டமிட்ட படுகொலை என நிரூபித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த பல ஆண்டுகளாக இந்த படுகொலைக்கான நீதி மறுக்கப்பட்டிருப்பதோடு, நினைவேந்தல்களை நடத்தும் போது பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் செம்மணி புதைகுழி தோண்டுதலை அனுமதித்துள்ளதையும், சத்துருக்கொண்டான் முகாமும் அதேபோல் தோண்டப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
பிரேரணை மீது சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் ஒப்புதல் தெரிவித்ததுடன், படுகொலை செய்யப்பட்டோரின் 35ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி சபை முழுவதும் எழுந்து நின்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.








