காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க நியாயமான, பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை செயல்முறைக்கு அதிகபட்ச ஒத்துழைப்பு வழங்கப்படும் என நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழி வளாகத்திற்கு நேற்று (05) கள விஜயம் மேற்கொண்ட, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ளார்.
அதற்கமைய, குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான முறைபாடுகளை நீதி அமைச்சு ஏற்று, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, கண்ணியமான தீர்வுகளை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் எனவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக, காணாமல் போனவர்கள் தொடர்பில் அதிகமாக முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் தலையீட்டின் கீழ், செம்மணி மனித புதைகுழியின் அகழ்வாராய்ச்சி, சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைய, வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீதி மற்றும் உண்மையைத் தேடுவது இந்த அரசாங்கத்தின் இறுதிப் பொறுப்பாகும் என நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட, கடந்த காலத்தின் கசப்பான சம்பவங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.








