நான்கு கொலைச் சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இவர் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொரளையில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கி தாரர் அம்பாறை – சியம்பலாண்டுவ பிரதேசத்தில் ஒளிந்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று (12) அங்கு நடத்திய நடவடிக்கையின் போது சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் மட்டும் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குறித்த சந்தேக நபர் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகமவில் முன்னாள் சிறை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் பொரளையில் இரண்டு இளைஞர்கள் அண்மையில் கொல்லப்பட்ட சம்பவம் உட்பட நான்கு கொலைகளில் தொடர்புடையதாக அவர் மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
பொலிஸார் தெரிவித்ததாவது, ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் மூன்று வேறு சம்பவங்களில் இவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 10 ஐஸ் போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன.
2015ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இவர், ‘குடு சலிந்து’, ‘தெஹிபலே ஐயா’, ‘தெஹிபலே மல்லி’, ‘வெலிகம சஹான்’ போன்ற குற்ற உலக நபர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும், இவர்களுக்காக வாடகைக் கொலையாளியாகச் செயல்பட்டிருக்கலாம் என்றும் விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது இவர் மேலதிக விசாரணைகளுக்காக தமன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.








