சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு, அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த பழங்குடியினர் மணற்கல் பாறைகளிலும் கன்மலைகளிலும் ஒட்டகங்களும் பல்வேறு விலங்குகளும் பொறிக்கப்பட்ட சிற்பங்களை உருவாக்கியிருந்தனர். இவை நீர் கிடைக்கும் இடங்களை குறிக்க செய்யப்பட்டவை என தொல்லியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
வட சவூதி அரேபியாவின் நெஃபுட் பாலைவனத்தின் தெற்குப் பகுதியில் சுமார் 30 கி.மீ. பரப்பில், 60க்கும் மேற்பட்ட பாறைகளில் 130க்கும் மேற்பட்ட விலங்கு படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மையானவை ஒட்டகங்கள். இதோடு இபெக்ஸ், மான், காட்டுக் கழுதைகள் மற்றும் காட்டு மாடுகள் போன்றவையும் பொறிக்கப்பட்டுள்ளன.
சில ஒட்டகச் சிற்பங்கள் 7 அடி உயரமும், 2.6 மீட்டர் நீளமும் கொண்டிருந்தன. சில படிமங்கள் எளிதில் அணுகக்கூடிய பாறைகளிலும், சிலவை 39 மீட்டர் உயரமுள்ள கன்மலையிலும் பொறிக்கப்பட்டிருந்தன.

“இத்தகைய இடங்களில் செதுக்குவது மிகுந்த ஆபத்தானது. இருந்தாலும், இயற்கை தோற்றத்துடன் அழகாக வடிவமைத்துள்ளனர்,” என ஆய்வாளர் மரியா குவான்ஜின் (Max Planck Institute) தெரிவித்தார்.
ஆய்வில் பயன்படுத்தப்பட்ட கல் கருவிகளின் ஒளிர்வு நாள்காட்டி (luminescence dating) பரிசோதனை மூலம், இவை 12,800 முதல் 11,400 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்டவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கலைப்பணிகள் 2,000–3,000 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கடைசி பனிக்காலத்தில் (20,000–25,000 ஆண்டுகளுக்கு முன்பு) அரேபிய தீபகற்பம் மனித வாழ்விற்கு அற்றதாக இருந்தாலும், 15,000 ஆண்டுகளுக்கு முன்பு மழை அதிகரித்து, குளங்களும் ஈரநிலங்களும் தோன்றியதால் மக்கள் குடியேறத் தொடங்கினர்.
“இந்தக் கண்டுபிடிப்பு, கடுமையான சூழலில் கூட வாழும் திறனை மனிதர்கள் பெற்றிருந்ததை காட்டுகிறது,” என Griffith பல்கலைக்கழக நிபுணர் மைக்கேல் பெட்ராக்லியா குறிப்பிட்டார்.








