அஞ்சல் உதவியாளர் தரம் III பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட 731 பேருக்கு நாளை (6) நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், அலரி மாளிகை வளாகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அஞ்சல் திணைக்களத்தில் 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அஞ்சல் உதவியாளர்களை நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யப்படாததால், கடந்த ஆண்டின் இறுதியில் 1,982 வெற்றிடங்கள் ஏற்பட்டன.

இந்த பாரிய வெற்றிடங்களால் திணைக்களத்தின் நடவடிக்கைகள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கின.
இதனைக் கருத்தில் கொண்டு, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கோரிக்கைக்கு அமைய, குறித்த வெற்றிடங்களில் 1,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை கடந்த ஓகஸ்ட் 19 ஆம் திகதியன்று ஒப்புதல் அளித்தது.
அதன்படி, தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்த, அஞ்சல் திணைக்களத்தில் இதுவரை பதிலீட்டு ஊழியர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தவர்களில் இருந்து 731 பேர் குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 269 வெற்றிடத்துக்கான ஏனைய அஞ்சல் உதவியாளர்களையும் விரைவில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








