சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் மரைன் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக நின்ற குறித்த நபரை விசாரித்தனர்.

அப்போது அவர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தப்பி தனுஷ்கோடி வந்திறங்கியது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்தனர்.
சந்தேகநபரிடம் மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர் இலங்கை மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சட்ட விரோதமான முறையில் கடல்வழியாக தமிழகத்திற்குள் சென்றதன் காரணம் குறித்து மரைன் பொலிஸார் மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.








