ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்கட்சியால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை நிராகரித்துள்ளது.
இந்த நடைமுறைத் தீர்மானத்திற்கு எதிராக 53 வாக்குகளும், ஆதரவாக 47 வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதன் மூலம், ஜனாதிபதியின் போர் தொடர்பான அதிகாரங்களை கட்டுப்படுத்த முயன்ற எதிர்க்கட்சியின் முயற்சி தோல்வியடைந்ததாக பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், குறிப்பாக லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையிலேயே, இந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தின் முக்கிய நோக்கம், அமெரிக்க ஜனாதிபதி, காங்கிரஸின் அனுமதி இல்லாமல் ஈரானுக்கு எதிராக நீண்டகால இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத வகையில் அவரது அதிகாரங்களை கட்டுப்படுத்துவதாகும்.

எனினும், அமெரிக்க செனட் சபையில் தற்போது குடியரசுக் கட்சியினரின் (Republican Party) ஆதிக்கம் நிலவுவதால், பெரும்பாலான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி ட்ரம்பின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளனர். இதன் காரணமாகவே இந்த தீர்மானம் தோல்வியடையும் என அரசியல் ஆய்வாளர்கள் முன்கூட்டியே கணித்திருந்தனர்.
அமெரிக்க அரசியலமைப்பின் படி, காங்கிரஸ் நிறைவேற்றும் எந்தச் சட்டமும் நடைமுறைக்கு வருவதற்கு ஜனாதிபதியின் கையொப்பம் அவசியமாகும். ஜனாதிபதி அந்தச் சட்டத்தை ஏற்க மறுத்தால், அவர் தனது “வீட்டோ” (Veto) அதிகாரத்தை பயன்படுத்தி அதை நிராகரிக்க முடியும்.
அதே நேரத்தில், ஜனாதிபதியின் வீட்டோ தீர்மானத்தை மீறி அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு, அமெரிக்க செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை வாக்குகள் அவசியமாகும்.
தற்போதைய அரசியல் சூழலில் இரு சபைகளிலும் குடியரசுக் கட்சியினரின் ஆதிக்கம் நிலவுவதால், ஜனாதிபதி ட்ரம்பின் போர் தொடர்பான அதிகாரங்களை காங்கிரஸ் கட்டுப்படுத்தும் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
“வீட்டோ (Veto) அதிகாரம்” என்பது ஒரு சட்டம் அல்லது தீர்மானத்தை ஒப்புதல் அளிக்காமல் அதை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆகும்.
அமெரிக்காவில், காங்கிரஸ் (செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை) நிறைவேற்றிய ஒரு சட்டத்தை ஜனாதிபதி ஒப்புக்கொள்ளாமல் வீட்டோ செய்து நிராகரிக்க முடியும். ஆனால் காங்கிரஸ் இரு சபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (2/3) வாக்குகளைப் பெற்றால், ஜனாதிபதியின் வீட்டோ அதிகாரத்தை மீறி அந்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தவும் முடியும்.
அதேபோல், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UN Security Council) அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பினர் நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. இந்த நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு வீட்டோ செய்தால், மற்ற உறுப்பினர்கள் ஆதரித்தாலும் அந்த சர்வதேச தீர்மானம் நிறைவேறாது.
இதனால், வீட்டோ அதிகாரம் என்பது ஒரு சட்டம் அல்லது சர்வதேச தீர்மானம் அமலுக்கு வருவதைத் தடுக்க பயன்படுத்தப்படும் முக்கிய அரசியல் அதிகாரமாக கருதப்படுகிறது.








