மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை குத்தகைக்குப் பெற்று நடத்துபவருக்கு எதிராக அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கத்தினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டமானது, இன்று(22) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது போராட்டக்கார்கள், களுவாஞ்சிகுடி நகரில் மிக நீண்டகாலமாக இயங்கிவரும் இந்த எரிபொருள் நிலையத்தை குத்தகைக்குப் பெற்றவர், உரியமுறையில் நடத்துவது இல்லை என்றும் வருடத்தில் 365 நாட்கள் என்றால் 200 நாட்களாகவது எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணை முற்றாக வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், பெற்றோல், டீசல் என எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், எரிபொருள் நிலையத்திற்குள் உட்பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி பகுதியில் விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் அதிகம் இருக்கின்றனர். வாகனங்களின் பாவனையும் இருக்கின்றன.
இப்படியொரு நிலையில், எரிபொருள் குறித்த எரிபொருள் நிலையத்தில் இல்லாத நிலைமை நீண்ட காலமாக நிலவிக் கொண்டிருக்கின்றன.
எனவே அரசாங்கம் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை குத்தகைக்கு வழங்கியவரிடமிருந்து, மீளப்பெற்று இதனை 24 மணிநேரமும், வருடத்தின் 365 நாட்களும் எரிபொருள் வழங்கும் தகுதி உடையவருக்கு வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தின் போது பொலிஸார் வருகை தந்து போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டுள்ளதுடன், விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர், போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








