ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை குறிவைத்து ஈரான் இராணுவம் நேற்று (15) ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஈரானின் பார்சு மாகாண தலைநகர் சிராசுவில் அந்த நாட்டின் இராணுவ தளம் உள்ளது. அங்கு ஏவுகணைகள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து சிராசுவில் உள்ள இராணுவ முகாம்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளன.

இதில் ஈரான் இராணுவ தளங்கள் கடுமையாக சேதமடைந்தன. இதேபோல ஈரானின் இஸ்பகானில் உள்ள இராணுவ முகாம்களை குறிவைத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் வான் வழி தாக்குதலை நடத்தின. ஈரான் முழுவதும் இதுவரை 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சிய தலைநகர் அபுதாபி, துபாய் பகுதிகளில் அமெரிக்க விமானப் படைத் தளங்கள் செயல்படுகின்றன. இந்த தளங்களை குறிவைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. மேலும் துபாய் மெரினா கடற்கரை, அல் சூபவ் பகுதிகளில் ஈரான் ஏவுகணைகள் விழுந்து வெடித்துச் சிதறின.
ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜாயிரா துறைமுகத்தின் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் துறைமுகத்தை ஒட்டியுள்ள எண்ணெய் கிடங்குகள் தீப்பிடித்து எரிகின்றன. அங்கு 2-வது நாளாக நேற்றும் எண்ணெய் கிடங்குகள் கொழுந்துவிட்டு எரிந்தன. தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.








