அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலுக்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை என தனது சட்டத்தரணியிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேவை அவரது சட்டத்தரணி நேற்று முதன்முறையாக சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன்போது, மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணைகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது தொடர்பான அரசின் நிலைப்பாடு மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் கோரிக்கை உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, தற்போது முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள தடுப்புக் காவல் நிலையத்தை “நரகம்” என வர்ணித்ததுடன், அங்கு மீண்டும் செல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் தன் மீது தனிப்பட்ட விரோத மனப்பான்மையுடன் செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேவேளை, கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தன்னை தொழில்முறை ரீதியில் கவனித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனையிலேயே தங்க விரும்புவதாக தனது சட்டத்தரணியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சுரேஷ் சலே பகிரங்கமாக விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் நாளுக்கான காணொளிக் காட்சிகள் எதுவும் இல்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.
ஒரு மாத காலத்திற்கான காணொளிப் பதிவுகள் மட்டுமே பாதுகாக்கப்படுவதால், மார்ச் 8ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்துக்கான காட்சிகள் தற்போது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தொடர்புடைய காணொளித் தகவல்களை மீட்டெடுக்க முடியுமா என்பது குறித்து பிற தொழில்நுட்ப தரப்புகளின் உதவியைப் பெற மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.








