தற்போதைய அரசாங்கம் முன்னைய விலைகளின்படி கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்பைக் காரணம் காட்டி, எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது எனக் கூறி வருவதை முன்னாள் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நிராகரித்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதியின் போது பழைய விலைகளுக்குப் பணம் செலுத்தப்படுவதில்லை என்றும், மூன்று அல்லது ஐந்து நாட்களின் சராசரி உலக சந்தை விலையிலேயே பணம் செலுத்தப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக சந்தை நிலவரப்படி, தற்போதைய நிலையில் இலங்கை நாணயப்படி ஒரு லீற்றர் பெட்ரோல் 225 ரூபாய்க்கும், ஒரு லீற்றர் டீசல் 246 ரூபாய்க்கும் வழங்கப்பட முடியும்.
எஞ்சிய தொகை அனைத்தும் அரசாங்கத்தின் வரிகள் மூலமாக அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஜே.வி.பி தலைமையகத்துக்கும் செல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் லீற்றர் ஒன்றிலிருந்து 200 ரூபாய்க்கும் அதிகமான தொகை மக்களிடமிருந்து சுரண்டப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொடுக்கல் வாங்கல் மோசடி மூலம் மட்டும் ஒவ்வொரு லீற்றர் டீசலிலும் அநுரகுமார திஸாநாயக்க 98 ரூபாயைத் திருடியுள்ளார்.
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு சுயாதீனமானது என்றால், இது குறித்து விசாரணை நடத்த தங்களை அழைக்குமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.
இதேபோன்று ஆதித்யா பிர்லா நிறுவனத்துடனும் மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்யும் அரசாங்கமாக அநுரகுமாரவின் அரசாங்கம் காணப்படுவதாகச் சாடியுள்ளார்.
கடந்த ஆண்டுகளில் நாட்டின் டொலர் கணக்கு சாதகமாக இருந்தபோதிலும், தற்போதைய நிலக்கரி மோசடி காரணமாக அது வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலக்கரி மோசடியால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட நாளொன்றுக்கு 12 இலட்சம் லீற்றர் டீசல் அல்லது திரவ எரிபொருள் எரிக்கப்படுவதாகவும், இதனால் பெருமளவு டொலர்கள் விரயமாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகள், சிறைச்சாலைகள், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் காவல்துறை ஆகியவற்றைக் காட்டி தங்களை அச்சுறுத்த முடியாது எனத் தெரிவித்த பாட்டலி சம்பிக்க ரணவக்க, வரவிருக்கும் தேர்தல்களில் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு எதிரான தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.








