உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் ‘எப்’ குழு லீக் போட்டியில் ஜப்பான் மற்றும் சுவீடன் அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையைப் பகிர்ந்து கொண்டன.
இன்று அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடியதால் முதல் பாதி கோலின்றி நிறைவடைந்தது.
இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய ஜப்பான், 56ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. எனினும், அதற்கு ஆறு நிமிடங்களில் பதிலடி கொடுத்த சுவீடன், 62ஆவது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தது.
அதன்பிறகு வெற்றிக்கான கோலைப் பெற இரு அணிகளும் கடுமையாக போராடினாலும், மேலதிக கோல்கள் எதுவும் பதிவாகாததால் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
இதனிடையே, ‘எப்’ குழுவின் மற்றொரு லீக் போட்டியில் நெதர்லாந்து அணி, துனிசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முக்கிய வெற்றியைப் பதிவு செய்தது.
ஆட்டத்தின் 3ஆவது நிமிடத்தில் துனிசியா வீரர் எல்லீஸ் ஸ்கிரி தவறுதலாக ஓன் கோல் அடித்ததன் மூலம் நெதர்லாந்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து 7ஆவது நிமிடத்தில் பிரையன் ப்ரோபி கோல் அடித்ததன் மூலம் முன்னிலை 2-0 ஆக உயர்ந்தது.
இரண்டாம் பாதியில் துனிசியாவின் ஹசெம் மஸ்தூரி 54ஆவது நிமிடத்தில் கோல் அடித்து வித்தியாசத்தை 2-1 ஆக குறைத்தார். இருப்பினும், 62ஆவது நிமிடத்தில் ஜோன் பால் வான் ஹெக்கே கோல் அடித்ததன் மூலம் நெதர்லாந்து தனது முன்னிலையை 3-1 ஆக உயர்த்தியது.
மீதமுள்ள நேரத்தில் இரு அணிகளும் முயற்சித்த போதிலும், மேலதிக கோல்கள் எதுவும் பதிவாகவில்லை. இதன் மூலம் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முழு புள்ளிகளையும் கைப்பற்றியது.








