ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருள்ராஜ் ஜெயகாந்தன் மற்றும் மாவட்ட மகளீர் அணி செயலாளர் திருமதி ரவீந்திரநாதன் கண்ணகி ஆகிய இருவரும் கட்சியில் இருந்து இன்று (27) இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்தனர்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப்ஃ மீடியா கற்கை நெறி நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இந்த இராஜினாமா செய்யும் அறிவிப்பு விடுத்துள்ளனர்.
“ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கடந்த 5 வருடங்களாக கட்சிக்காக செயற்பட்டதுடன், உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு கட்சி சார்பில் போட்டியிட்டோம் இதன் போது போனஸ் ஆசனமாக இரண்டு ஆசனம் கிடைத்தது.

இந்த இரண்டு ஆசனங்களை மட்டக்களப்பு நகரில் ஒருவருக்கும் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் முஸ்லீம் பெண் ஒருவருக்கும் இந்த ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே கட்சிக்காக உழைத்த பலர் இருக்கின்ற நிலையில் ஒரு வருடத்துக்கு ஒருவர் என மாற்றி ஆசன ஒதுக்கீட்டை செய்யுமாறு கட்சியிடம் கோரினோம் கட்சி அதனை செவிமடுக்க வில்லை.
இந்த நிலையில் மாநகர சபை தேர்தலில் 98 வீதம் தமிழ் வாக்குகளை பெற்று கொடுத்த நிலையில் எங்களுக்காக அளிக்கப்பட்ட வாக்குகளை கொண்டு முஸ்லீம் பெண் ஒருவருக்கு போனஸ் ஆசனம் வழங்குவதை வாக்களித்த தமிழ் மக்கள் மிக கேவலமாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
எனவே இது தொடர்பாக கட்சியின் கவனத்துக்கு கொண்டு வந்தோம் ஆனால் அவர்கள் அதற்கான தீர்வை தரவில்லை. எனவே இவ்வாறு தீர்வை வழங்காத நிலையில் கட்சியில் இருந்து நானும் மகளீர் அணி செயலாளரும் இராஜினாமா செய்வதகாத தீர்மானம் எடுத்து, இராஜினாமா கடிதத்தை கட்சிக்கு அனுப்பியுள்ளோம்” என்றார்.