2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில், 3,811 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான வூட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (31) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், 2024ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். 2025ஆம் ஆண்டில் மேலும் 1,549 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்ய சட்ட நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதேவேளை, 2026ஆம் ஆண்டில் இதுவரை 772 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் மொத்தம் 239,384 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 995 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 378 சந்தேகநபர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 3,287 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகளும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், கடந்த ஒன்பது மாதங்களில் பாதுகாப்புப் படையினரால் 2,253 கிலோ 834 கிராம் ஹெரோயின், 2,640 கிலோ 695 கிராம் ஐஸ் மற்றும் 293 கிலோ 732 கிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் மொத்த சந்தை மதிப்பு 102,116 மில்லியன் ரூபாய் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.








