1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி இடம்பெற்ற காத்தான்குடி பள்ளிவாயல் இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னமும் முழுமை பெறாமல் உள்ள நிலையில், அவை சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (ஆகஸ்ட் 3) காத்தான்குடியில் நடைபெற்ற 35வது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
குறித்த நிகழ்வு, 1990ஆம் ஆண்டு ஹுஸைனியா மற்றும் மீரா ஜும்ஆ பள்ளிவாயல்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்த 103 ஷுஹதாக்களை நினைவுகூரும் வகையில், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலாமா சபை மற்றும் ஊர் ஜமாஅதார்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

“இந்த நிகழ்வு, அதிநடுக்கமான நினைவுகளை மீட்டுக் கொள்வதற்கும், ஷுஹதாக்களுக்காக பிரார்த்தனை செய்வதற்குமான ஒரு முக்கிய தருணமாக அமைந்துள்ளது,” என்று ஹக்கீம் தெரிவித்தார்.
மேலும், “இவ்வாறான சோகம் நிறைந்த வரலாற்று நிகழ்வுகளின் பாடங்களை நம் சமூகங்கள் புரிந்துகொண்டு, இனங்களுக்கிடையிலான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதே இந்த நினைவுநாளின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
இவ்வாறான துயர சம்பவங்களை ஆழமாக நினைவில் வைத்துக் கொண்டு, நீதி வழங்கப்படாத இந்த விசாரணையை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார்.








