வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் முன்னெடுப்பில் நடைபெறும் “100 நாள் செயல்முனைவு” செயற்திட்டத்தின் நான்காவது ஆண்டுக்கான நிகழ்வுகள் இம்மாத தொடக்கத்துடன் ஆரம்பமாகியுள்ளன. அதன் தொடர்ச்சியாக, இன்று (04) மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் கட்டுமுறிவு சந்தி பகுதியில் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“சமூகப் பிரச்சினைகளும் – சமஸ்டி முறையிலான தீர்வுகளும்” என்ற கருப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் இச்செயற்திட்டம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனைகள் தொடர்பான அரசியல் உரையாடலை உருவாக்குவதே நோக்கமாகக் கொண்டுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “சமஸ்டியே தீர்வு”, “எங்கள் வளம் எங்கள் உரிமை”, “இணைந்த மாகாணத்துக்கு அதிகாரப் பகிர்வு உறுதி செய்க” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்தநிகழ்வின் போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய தலைமைத்துவத்துடன் ஆட்சியில் இருந்தாலும், அரசியல் தீர்வுகள் குறித்து இதுவரை மௌனம் காத்துவருவதாகவும், இதுவே ஜனநாயகக் கொள்கைகளை சவாலுக்கு உள்ளாக்குவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், வடக்கு கிழக்கில் தொடர்ந்து காணப்படும் ராணுவ மயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்கள ஆக்கிரமிப்பு, மகாவலி குடியேற்றத் திட்டம், சிங்கள மற்றும் பௌத்த மயமாக்கம், தமிழ் மொழி உரிமை புறக்கணிப்பு, இனவாத அச்சுறுத்தல்கள் ஆகியவை தற்போது நிலவும் அடக்குமுறைகளாக சுட்டிக்காட்டப்பட்டன.
அத்துடன், இன மத பேதமின்மை எனும் அடிப்படையிலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைந்தாலும், உண்மையான தீர்வு என்பது சமஸ்டி முறையிலான, நிலையான, கௌரவமிக்க அரசியல் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும் திட்டமாக இருக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கவனஈர்ப்பு நிகழ்வில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




























