யாழ்ப்பாணத்தில் முன்மொழியப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம், இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) தற்போதைய நிதி வரம்புகள் காரணமாக சுருக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் கௌரவ செயலாளர் பிரகாஷ் ஷாஃப்டர் தெரிவித்ததாவது, ஆரம்பத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம், விளையாட்டு நகரம் மற்றும் வீட்டுவசதித் திட்டங்களை உள்ளடக்கியதாக இருந்த இத்திட்டம் தற்போது மீளாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு, யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கம் தொடர்ந்தாலும், முழுமையான சர்வதேச மைதானத் திட்டத்தை முன்னெடுக்கும் அளவுக்கு நிதி வசதி இல்லை என அவர் குறிப்பிட்டார்.
இதனால், எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை மேம்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தப்படும் எனவும், ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட விளையாட்டு நகரம் மற்றும் வீட்டுவசதித் திட்டங்கள் கைவிடப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஒழுங்குமுறை அனுமதிகள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தாலும், திட்டத்தின் இறுதி வடிவம் மற்றும் முதலீட்டு அளவு குறித்து இலங்கை கிரிக்கெட் சபை தொடர்ந்து மீளாய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.








