மட்டக்களப்புக் கறுவாக்கேணியில் வாழும் கவிஞர் முத்துமாதவன் தனது மூன்றாவது சிறுகதை நூல் ‘வேரை மறந்த விழுதுகள்’ ஐ வெளியிட்டு விழாவை நேற்று (28) கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி மண்டபத்தில் முன்னெடுத்தார்.
விழாவை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுசரித்தது. கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் த.நிர்மலன் தலைமையில் நடந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் கலந்து கொண்டார்.
கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி அதிபர் சி.சிவநேசராசா மற்றும் பிரதேச சமூக சேவையாளர்கள் சிறப்பு அதிதிகளாக கலந்து, மலர் மாலை அணிவித்து வரவேற்பும், மங்கள விளக்கேற்றலும், மௌன இறை வணக்கமும் நடைபெற்றன.
நிகழ்வில் தமிழ் மொழி வாழ்த்து ஆசியுரையை சிவஸ்ரீ கண்ணன் குருக்கள் வழங்கியதன் பின்னர், வரவேற்புரையை ந.காண்டீபன், சிறப்புரையை ஊடகவியலாளர் த.நடராசா, நூல் அறிமுகவுரையை தமிழ் ஆசிரிய ஆலோசகர் எ.ஜெயரஞ்சித் வழங்கினர். நூல் ஆய்வினை கிரான் மத்திய கல்லூரி ஆசிரியர் பாரதி சாஜகான் முன்னெடுத்தார். நூலின் முதல் பிரதியை த.சதானந்தன் பெற்றார்.
நிகழ்வின் இறுதியில் நூலாசிரியர் உரையாற்றி, லா.தவசுதனின் நன்றியுரையுடன் ‘வேரை மறந்த விழுதுகள்’ வெளியீட்டு விழா இனிதே நிறைவடைந்தது.

















