மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சர்வதேச சிறுவர் தினமும் முதியோர் தினமும் ஒருங்கிணைந்த வகையில் “உலகை வழிநடத்த அன்பால் போஷியுங்கள்” மற்றும் “எமது மரியாதைக்குரிய முதியோர்கள்” என்ற தொனிப்பொருள்களுடன் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதேச முதியோர்களும் சிறுவர்களும் கலந்து சிறப்பித்ததோடு, பிரதேச செயலக கணக்காளர், உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக இணைப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
விழாவை சிறப்பிக்கும் வகையில், பாலர் பாடசாலை மாணவர்களால் போஷாக்கான உணவுக் கண்காட்சி, சிறுவர் மற்றும் முதியோர்களின் கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள், மேலும் விவாதப் போட்டியின் இறுதிச்சுற்று ஆகியவை நடத்தப்பட்டன.
நிகழ்வின் நிறைவாக “ஊற்று” கையெழுத்து சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றதுடன், பங்கேற்ற சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதேசமயம் இந்த விழா சிறுவர் மற்றும் முதியோர் உறவுகளை வலுப்படுத்தி, தலைமுறை இடையேயான அன்பும் புரிதலும் வளர்க்கும் அரிய தளமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தத்தக்கது.




















