இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகளில் இருந்து அவருக்கு மன்னிப்பு வழங்கக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாகிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் அரசியல் உதவிகளுக்காக 2,60,000 அமெரிக்க டொலர்கள் அளவிலான விலை உயர்ந்த பொருள்களை இலஞ்சமாகப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இந்த வழக்குகளில் இருந்து பிரதமர் நெதன்யாகு விடுவிக்கப்பட வேண்டுமெனவும், அவருக்கு இஸ்ரேல் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டுமெனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், ஊழல் வழக்குகளில் இருந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இஸ்ரேல் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டுமெனக் கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாகிற்கு கடிதம் எழுதியுள்ளதாக, இன்று (12) தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 3,000 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த அமைதியை நாம் தற்போது நிலைநிறுத்தியுள்ளோம். போர்க்காலத்தில் வலிமையான பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகுவை முழுமையாக மன்னிக்குமாறு இதன் மூலம் நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். என ஜனாதிபதி ட்ரம்ப் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்








