மாணவர்களுக்கு மலிவான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை வழங்கும் நோக்கில், “ஆரோக்கியமான பாடசாலை உணவகங்களுக்கான வழிகாட்டுதல்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட உணவுப் பொருட்களின் பட்டியலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களின்படி, நோய் பரப்பும் காரணிகளற்ற தூய்மையான மற்றும் பாதுகாப்பான சூழலைப் பேணுதல், உணவக நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்தல் மற்றும் உணவு கையாளுபவர்களிடையே தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் பொறுப்புணர்வு தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளின் உணவு விருப்பங்கள், ஊட்டச்சத்து தேவைகள் மற்றும் உள்ளூர் உணவுப் பண்பாட்டை கருத்தில் கொண்டு பாடசாலை உணவுப் பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, பாடசாலை உணவகங்களில் விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ள உணவுப் பொருட்களில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் மற்றும் அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பர்கர்கள், ஹாட் டாக்ஸ், பீட்சா போன்ற உணவுகள் அடங்குகின்றன.
அத்துடன், பேஸ்ட்ரி, டோனட், எக்ளேர், பிஸ்கட், கேக் போன்ற அதிக சர்க்கரை மற்றும் மாவுச் சத்து கொண்ட உணவுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
உடனடி நூடுல்ஸ், சூப் கட்டிகள், மசாலாப் பொடிகள், டப்பாவில் அடைக்கப்பட்ட ஊறுகாய்கள் உள்ளிட்ட உடனடி உணவுகள் மற்றும் சுவையூட்டிகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மேலும், சூயிங்கம், டாஃபி, லாலிபாப், ஐஸ்கிரீம், புட்டிங் உள்ளிட்ட அதிக சர்க்கரை கொண்ட இனிப்பு வகைகள், பூந்தி, மஸ்கட், தோடோல், முறுக்கு போன்ற உப்பு அதிகமுள்ள தின்பண்டங்கள் மற்றும் பல்வேறு சிற்றுண்டி வகைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், கார்பனேற்றப்பட்ட பானங்கள், அதிக சர்க்கரை கொண்ட பானங்கள், சுவையூட்டப்பட்ட பால் மற்றும் தயிர் பானங்கள், ஆற்றல் பானங்கள், உடனடி தேநீர் மற்றும் கோப்பி போன்ற பானங்களும் பாடசாலை உணவகங்களில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படமாட்டாது.
பாடசாலை மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிப்பதோடு, தொற்றா நோய்களுக்கு வழிவகுக்கும் உணவுகளின் பயன்பாட்டைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.








