முன்னாள் புலனாய்வுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே நலமுடன் இருப்பதுடன், அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்காக விசேட அறை எதுவும் ஒதுக்கப்படவில்லை என்றும், வழக்கமாக பயன்படுத்தப்படும் அறையிலேயே அவர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் இதற்கு முன்னரும் பலர் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த அறைகள் 2024 செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் புதிதாக அமைக்கப்பட்டவை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேவுக்கு உணவு மறுக்கப்படவில்லை என்றும், அவர் தன்னிச்சையாக வாய்வழி உணவை உட்கொள்ள மறுத்துள்ளதே தற்போதைய நிலைமைக்கு காரணம் என்றும் அமைச்சர் கூறினார்.
எனினும், மருத்துவர்களின் கண்காணிப்பில் அவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் சுயநினைவுடன் இருந்து தனது அன்றாட தனிப்பட்ட தேவைகளைத் தானே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
வாய்வழியாகவோ அல்லது மூக்கின் வழியாக செலுத்தப்பட்டுள்ள குழாய் மூலமாகவோ தேவையான உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அவரது குடும்பத்தினரால் கொண்டு வரப்படும் உணவுகளும் அவருக்கு வழங்கப்படுவதாகவும், தேவையெனில் கூடுதல் உணவுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனால், சுரேஷ் சலேவின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என வலியுறுத்திய அவர், வெளியக ஆர்ப்பாட்டங்கள், ஊடக சந்திப்புகள் அல்லது மதச் சடங்குகள் மூலம் இந்த நிலைமையை மாற்ற முடியாது என்றும் கூறினார்.
மேலும், நாட்டில் இடம்பெற்ற முக்கிய குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருவதால், அந்த விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.








