கொந்தளிப்பு கடலால் அடித்துச் செல்லப்பட்ட காரைதீவு மீனவப் படகுகள் ஏறாவூர் சவுக்கடியில் கரையொதுங்கின
அம்பாறை – காரைதீவு கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு மீனவப் படகுகள், அசாதாரண காலநிலையால் கட்டுப்பாட்டை இழந்து மட்டக்களப்பு – ஏறாவூர் சவுக்கடி கடற்கரையில் கரையொதுங்கியுள்ளன.
இந்த இரண்டு படகுகளிலிருந்த ஐந்து மீனவர்களும் பாதுகாப்பாக கரைசேர்ந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் காரைதீவு பகுதையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (14) இரவு காரைதீவு கடலில் மீன்பிடியில் இருந்தபோது கடலில் திடீரென ஏற்பட்ட கொந்தளிப்பு அலைகள் காரணமாக படகுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதன் போது மீனவர்கள் கடலில் தத்தளித்ததாகவும், ஏறாவூர் சவுக்கடி மீனவர்களின் உதவியுடன் பின்னர் பாதுகாப்பாக கரைசேர முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் ஒரு மீனவருக்கு லேசான உடல் உபாதை ஏற்பட்டதால் அவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
கரையொதுங்கிய படகுகளை மீண்டும் காரைதீவுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.











