கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த உறுப்பினர் முகமட் மீராசாவு முகமட் ஹலால்டீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் A.L.M. அஸ்மி தலைமையில், நேற்று முன்தினம் (20) நடைபெற்ற சிறப்பு அமர்விலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது.
முன்னாள் தவிசாளராக இருந்த முகமட் கனீபா முகமட் பைருஸ், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கட்சி மாறியிருந்தார். கட்சியின் தீர்மானத்தை மீறியதன் காரணமாக அவர் உறுப்பினர் பதவியும் அதனுடன் தவிசாளர் பதவியும் நீக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவே புதிய தவிசாளர் தெரிவு நடத்தப்பட்டது.

19 உறுப்பினர்களைக் கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபையின் இவ்வமர்வில் 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் 8 உறுப்பினர்களும், இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த தலா 1 உறுப்பினரும் கலந்து கொண்டு புதிய தவிசாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 6 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியின் 2 உறுப்பினர்களும் அமர்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








