மன்னார் தரவன்கோட்டை பகுதியில் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று, சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்ததாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அதிகாரிகள் திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த நிலையத்தில் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அங்கு பனங்கள்ளை பயன்படுத்தி சில பனை சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், அவை தயாரிக்கப்படும் முறையில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உற்பத்தி செயற்பாடுகள் இடம்பெற்ற சூழலில் சுகாதார சீர்கேடுகள் இருந்ததாகவும் ஆரம்பக் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து குறித்த நிலையத்தில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.















