கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கேகாலை வரகோடா பகுதியில் இடம்பெற்ற பாரிய சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (22) நண்பகல் சுமார் 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, தனியார் பேருந்தொன்று மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சாரதி பயிற்சி வாகனங்கள், இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மொத்தம் ஆறு வாகனங்கள் தொடர்புடைய இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்தும் சில நேரம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








