செம்மணியில் மீட்கப்பட்டு வரும் மனித எச்சங்கள், தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அநீதிகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முக்கிய ஆதாரங்களாக அமைந்துள்ளன என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், செம்மணி பகுதியில் 400-க்கும் மேற்பட்ட மனித உடல் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தை வெளிக்கொணருவதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியமை வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் விசாரணைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்களை அடையாளம் காணும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அநீதிகள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரவும், அவற்றை ஆவணப்படுத்தவும் பொறுப்பு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விடயத்தில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து தனது நடுநிலைத் தன்மையையும் நீதித்தன்மையையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.








