அம்பாறை டிப்போவுக்குச் சொந்தமான இலங்கைப் போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்து ஒன்று இன்று (24) அதிகாலை வெல்லம்பிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துக்கு, பேருந்தை செலுத்திக் கொண்டிருந்த சாரதிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பே காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, சாரதியின் உடல்நலக் குறைவு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, வெல்லம்பிட்டிய அம்பகஹ சந்தி பகுதியில் பாதையை விட்டு விலகி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் காரணமாக பேருந்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக மீட்கப்பட்ட சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








