வெனிசுவேலாவின் கரீபியன் கடற்கரைப் பகுதியில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோரோன் நகருக்கு மேற்கே சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் கராகஸில் உள்ள கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், அச்சமடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை உயிரிழப்புகள் அல்லது பாரிய சேதங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அண்டை நாடான கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் மீண்டும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்தடுத்த அதிர்வுகள் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.








