ஆண்டுதோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தத்தை எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்துமாறு தனியார் பஸ் சங்கங்கள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பான எழுத்துப்பூர்வ கோரிக்கை நேற்று (24) கையளிக்கப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் அடுத்த ஐந்து நாட்களுக்குள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள எரிபொருள் விலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, அனைத்து தனியார் பஸ் சங்கங்களுடனும் கலந்துரையாடிய பின்னர், வழக்கம்போல் ஜூலை 1 ஆம் திகதி முதல் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பஸ் கட்டண திருத்தம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.








