வடமராட்சி கிழக்கு- கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத கடல் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான சிறிய மீன்களை பிடிப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோத தொழிலில் ஈடுபட வேண்டாமென நீரியல்வளத்துறை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் அதனை பின்பற்றாமல் தொடர்ந்து ஒளி வைத்து பல்லாயிரக்கணக்கான மீன்களை பிடித்து வருகின்றனர்.
கடந்த நாட்களாக சட்டவிரோத தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கான சிறிய மீன்களை சட்டவிரோதமாக பிடித்து வருவதுடன், பாவனைக்கு உதவாதென கூறி பெரும் தொகையான சிறிய மீன்களை கடலில் வீசிவிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடமும் வடமராட்சி கிழக்கில் சுருக்குவலை தலை தூக்கிய போதும் சட்டவிரோத சுருக்குவலை தொழிலாளர்களை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை.
இந்த புதிய அரசாங்கத்தில் வடமராட்சி கிழக்கில் மீண்டும் சட்டவிரோத சுருக்குவலை தொழில் தலை தூக்கியுள்ளதால் கடற்றொலில் அமைச்சர் விரைந்து இவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் கோரியுள்ளனர்.
மேலும், வடமராட்சி கிழக்கில் கடற்படையின் மிகப்பெரிய கடற்படை தளமாக வெற்றிலைக்கேணி கடற்படை தளம் அமைந்துள்ள போதும் பல நூறு படகுகளில் தினம் தினம் சட்டவிரோத தொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.