டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததுடன், தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி பயணித்த பல இளைஞர்கள் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 8 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களை ஆய்வு செய்ததன் பின்னரே இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி ஆகியோரின் ஆலோசனையின் பேரில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த பிரதீப் குமார மற்றும் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி விஜயவர்தன ஆகியோரின் தலைமையில் இந்த அதிரடி சோதனை முன்னெடுக்கப்பட்டது.
“சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்கள் தொடர்பான காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களை உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும்” என சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களுக்கு எதிரான தொந்தரவு சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும் என்றும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் வாகனப் பயன்பாடு மற்றும் நண்பர்கள் வட்டம் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.








