தொலைபேசி சின்னம் காலாவதியானது என்றும், வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் தாம் அதனை ஆதரிக்கப் போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் ஆதரவாளர்களை உரையாற்றும் போது இந்தக் கருத்தை வெளியிட்டார்.

தொலைபேசி சின்னம் காலாவதியாகிவிட்டது. அதற்காக நாங்கள் வாக்குகளைக் கோர மாட்டோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான உறவு குறித்தும் மிக ஆழமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு குறித்து தீவிரமான பரிசீலனை அவசியமாகும்.
இம்முறை, உள்ளூராட்சித் தேர்தலில் நாம் தனித்தனியாகப் போட்டியிடுகிறோம். கண்டியில் கூட, நாங்கள் 11 சபைகளில் தனித்தனியாகப் போட்டியிடுகிறோம். முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் மாத்திரமே 3 இடங்களில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். அவர்களின் சொந்த விருப்பத்திற்கமையவே அவர்கள் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.