இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், இராமேஸ்வரத்தில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்களின் படகில் ஏற்பட்ட எதிர்பாராத இயந்திரக் கோளாறு காரணமாகவே அவர்கள் கடல் எல்லையைத் தாண்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும், கேரளாவைச் சேர்ந்த ரோஹன் உள்ளிட்டவர்களையும் உடனடியாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
மேலும், மீனவர்களின் வாழ்வாதாரமான படகை அதன் உரிமையாளர் ரமேஷிடம் மீண்டும் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்களை குற்றவாளிகளாகக் கருதாமல், அவர்களை பாதுகாப்பாக மீண்டும் தாயகத்துக்கு அனுப்புவதற்கான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து உருவாக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார்.








