2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் பெறுபேறுகளின்படி மொத்தமாக 177,588 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது பரீட்சைக்கு தோற்றிய மொத்த மாணவர்களில் 64.43 சதவீதமாகும்.
இதற்கிடையில், 456 பரீட்சார்த்திகளின் பரீட்சை முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், உயர்தரப் பரீட்சை முடிவுகளை மீள் மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மே 2 முதல் மே 16 ஆம் திகதி வரை ஆன்லைன் முறை மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 222,774 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 51,587 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றினர்.