கொழும்பு மாநகர சபையின் மேயராக வ்ராய் கெளி பள்தசார் நாளை (02) பதவியேற்பார் என வர்த்தகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (31) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
உப்பு விவகாரம் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் ஊடக அடக்குமுறை என்ற அரசியல் பிரச்சாரத்தை எதிர்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.
ஊடகங்களை அடக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்துக்கு அமைய நாட்டு மக்களுக்கு உண்மையை குறிப்பிட்டால் எவருக்கும் எவ்வித பிரச்சினையும் கிடையாது.

நிகழ்நிலை காப்புச் சட்டம் வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும். சமூக வலைத்தளங்களில் எவரும் எதனையும் குறிப்பிடலாம் என்ற நிலைமை காணப்படுகிறது. இதனை முறையான கண்காணிக்க வேண்டும்.
உள்ளூராட்சிமன்றங்களின் பதவி காலம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.கொழும்பு மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வ்ராய் கெளி பள்தசார் நாளை பதவியேற்பார்.
மாநகர சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர் கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த காலங்களில் அரச அனுசரணையுடன் அரச நிதியை கொள்ளையடித்தவர்கள் இன்று சிறை செல்கிறார்கள். ஊழல்வாதிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் அரசாங்கம் வழங்காது என்றார்.