மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தவிசாளராக விமலநாதன் மதிமேனன் நேற்று (02) ஆம் திகதி காலை பதவியேற்றார்.
இவர் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான உள்ளுராட்சி தேர்தலில் மண்டூர் வட்டாரத்தில் போட்டியிட்டு 1101 வாக்குகளை பெற்றுள்ளார்.
போரதீவுப்பற்று உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் தமிழரசுக்கட்சியினர் போட்டியிட்டு 50 வீதமான வாக்குகளைப்பெற்று தனித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், தவிசாளராக வி.மதிமேனனும், துணை தவிசாளராக பாலையடிவட்டை வட்டாரத்தில் தெரிவான தங்கராசா-கஜசீலன் தெரிவு செய்யப்பட்டு வர்த்தமானி நேற்றையதினம் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக நேற்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றார்கள்.














இப்பதவியேற்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீ.நேசன், இரா.சணாக்கியன்,வைத்தியர் இ.ஸ்ரீநாத், தமிழரசுக்கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள்,பிரதேச சபைச்செயலாளர் எஸ்.பகீரதன் ஆகியோர்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் விசேடமாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொண்டார்.
10 வட்டாரங்களைக் கொண்ட போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் பட்டியல்வேட்பாளர்கள் அடங்களாக 16 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் 8 உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பிலும், 5 உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பிலும், 3 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சார்பிலும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேசமயம் விமலநாதன் மதிமேனன் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணாக்கியினின் செயலாளராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.