மட்டக்களப்பு மாவட்டத்தில் 700 சிறுவர்கள் மற்றும் மேல் மாகாணத்தில் 2019 சிறார்கள் உட்பட, இலங்கை முழுவதும் 4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பொலிஸார் கண்டறிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.
இன்று (13) மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில், அபிவிருத்திக் குழுத் தலைவர் அமைச்சர் சுனில் ஹந்திநெத்தி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இந்த தகவலை வெளியிட்டார்.
குறித்த சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதற்கான முக்கிய காரணங்கள் – தாயார் அல்லது தந்தையார் வெளிநாடு சென்றிருப்பது, பெற்றோர் பிரிந்து வேறு திருமணம் செய்துகொள்வது, அல்லது போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது போன்றவை என அவர் விளக்கினார்.

அதேவேளை, மேல் மாகாணத்தில் மட்டும் 2019 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதுடன், இலங்கை முழுவதும் 4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு அன்பு, பராமரிப்பு, ஆதரவை வழங்குவதற்கும், அவர்கள் கல்வியை பல்வேறு வழிகளில் இடையறாது தொடர்வதை உறுதி செய்யும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளீதரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், இரா. சாணக்கியன், ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜெயசுந்தர, மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மென்டிஸ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தின, 15 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மட்டு–அம்பாறை விசேட அதிரடிப்படை தளபதி, மட்டு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








